இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்கள் குவித்ததற்கு பதிலடியாக இங்கிலாந்து அணி 465 ரன்களை விளாசியது. இதன்பின் 3வது நாள் முடிவில் இந்திய அணி 90 ரன்களுடன் களத்தில் இருந்தது. பின்னர் இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் 8 ரன்களில் வெளியேறினார்.
ரிஷப் பண்ட் 8வது சதம்
இதன்பின் ஆட்டம் சுப்மன் கில் – கேஎல் ராகுல் கைகளுக்கு வந்தது. அதிரடியாக தொடங்கினாலும், கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடினார். வித்தியாசமாக எந்த ஷாட்டையும் முயற்சிக்காமல் ரிஷப் பண்ட் ஆடியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதன்பின் 2வது செஷனில் ரிஷப் பண்ட் தனது பாணிக்கு மாறினார்.
பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டிய ரிஷப் பண்ட், 130 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 8வது சதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய அவர், 140 பந்துகளில் 3 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 118 ரன்களை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசி இருந்தார்.
இத்தனை சாதனைகளா
இதன் மூலமாக டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 7வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் ஒரே டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய விக்கெட் கீப்பராக ஜிம்பாப்வே ஜாம்பவான் ஆண்டி பிளவர் இருந்து வந்தார். தற்போது அந்த பட்டியலில் ரிஷப் பண்ட் இணைந்து அசத்தி இருக்கிறார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

