இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி ஓப்பனராக இருக்கும் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அபிஷேக் ஷர்மா குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் விளையாடி புகழ்பெற்று அதற்குப் பிறகு இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். அதற்குப் பிறகு அவர் இந்திய டி20 அணிக்குள் நுழைந்ததும் விளையாடிய விதம் என்பது வேறு. ஆனால் சன்ரைசர்ஸ் அணிக்கு முன்னதாக அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணி அவரை டிரேடிங் முறையில் தங்கள் பக்கம் இழுத்தது நினைவிருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் அப்போது டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அவரை டிரேடிங் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சியதாக தற்போது சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை அபிஷேக் ஷர்மாவின் முதல் பயிற்சியாளர் நான்தான். நான் அவரை முதல் முதலாக பார்த்தபோது அவருக்குள் ஏதோ ஒரு சிறப்பான விஷயம் இருப்பதாக உணர்ந்தேன். அவர் ஒரு நட்சத்திர வீரராக இருப்பார் என்று நினைத்தேன். அதனால்தான் அவரை டெல்லி டிரேடிங் செய்த போது நான் எவ்வளவோ முயற்சி செய்து வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என்று பேசி இருக்கிறார்.

