நேற்று பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 111 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இது பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் விராட் கோலியின் பிரமாதமான சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. இந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் பாபர் அசாம் 36 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 96 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
இந்த போட்டியில் நேற்று 50 ரன் குவித்தன் மூலமாக பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் 39 அரை சதங்கள் அடித்து அதிக டி20 அரை சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறினார். 132 இன்னிங்ஸ் விளையாடிய அவர் இந்த சாதனையை முறியடித்திருக்கிறார். விராட் கோலி 117 இன்னிங்ஸ் விளையாடி 38 அரை சதம் அடித்து இரண்டாவது இடத்திலும், அதற்கு பின்னர் ரோஹித் சர்மா 151 இன்னிங்ஸ் விளையாடி 32 அரைசதம் அடித்து மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

