இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்னர் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் என்பதால் கிரிக்கெட் வல்லுனர்களிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
இதற்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல்லில் பங்கு பெற உள்ளது. எனவே டி20 மற்றும் ஐபிஎல்-லைப் பொறுத்தே உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு பெரும்பாலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கைப் பொருத்தவரை இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கும் நிலையில் ஒன் டவுனில் விராட் கோலி களமிறங்கலாம். கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கும் நிலையில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ரன் குவிக்க ரிங்கு சிங் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தற்போது இந்திய அணியின் பலமாக உள்ளனர்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் ஆவேஷ் கான், ஹர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். எனவே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணி யாரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நேர்காணலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாகீர் கான் உலகக் கோப்பையில் இடம் பெற தனக்கு விருப்பமான பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்
“ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் உலகக் கோப்பையில் இடம் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். அர்ஸ்தீப் சிங் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் மட்டுமல்லாமல் அவர் நல்ல யார்க்கர்களையும் வீசக் கூடியவர். அது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
மற்றும் உலகக்கோப்பைக்குப் பிறகு கணுக்காலில் காயம் அடைந்த முகமது சமி உடற்தகுதி பெறும் நிலையில் அவரை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்கிறேன். அவர் இந்திய அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். எனவே இந்த நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா ஆதரவு தெரிவித்து இருக்கிறார். முகமது சமி முழுமையான உடற்தகுதி அடைந்தால் அவர் நிச்சயமாக டி20 உலகக்கோப்பையில் இடம் பெற வேண்டும். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.

