2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அனைத்து அணிகளும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு தயாராகும் வகையில் தற்போது அனைத்து நாடுகளும் பல்வேறு t20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்திய அணி நிர்வாகமும் 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 போட்டிகளை கருத்தில் கொண்டு வலுவான இந்திய டி20 அணியை கட்டமைத்து வருகிறது. கடந்த உலகக் கோப்பை டி20 போட்டிகள் முடிவடைந்த நாளிலிருந்து இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஆன ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு டி20 போட்டிகளில் தொடர்ந்து ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது
மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணியினர் தொடர்ந்து டி20 அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். தற்போது உலகக்கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற முடியாத சூழலில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் உலகக்கோப்பைக்கு ஆறு மாதங்களை பாக்கி இருக்கும் நிலையில் இந்தியா அணிக்கு யார் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவருமான ஜாகிர் கான் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக cricbuzz இணையதளத்தில் பேசியிருக்கும் ஜாகீர் கான்” டி20 உலக கோப்பை இன்னும் சில காலங்களில் துவங்க இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கு தயாராக அதற்கான கால அளவும் குறைவாகவே உள்ளது. உங்கள் அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்திய அணி t20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா வை கேப்டனாக நியமித்தாலும் பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளில் அனுபவமே கை கொடுக்கும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணியை சிறந்த முறையில் அவர் வழி நடத்தி இருக்கிறார். மேலும் எந்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அழுத்தமான சூழ்நிலைகளிலும் அணியை கையாளுவதில் ரோஹித் சர்மா சிறந்தவர். அவருக்கு இருக்கும் ஒரே சவால் குறைவான போட்டிகளில் ஆடி உலக கோப்பையை எதிர்கொள்வது தான். எனவே ரோஹித் சர்மாவை உலகக்கோப்பை டி20 இந்தியா அணிக்கு கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும்” என தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஜாகிர் கான்.
இந்திய அணிக்காக அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியவர் கேப்டன் ரோகித் சர்மா. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். கேப்டனாக மட்டுமல்லாமல் துவக்க வீரராகவும் இந்திய அணிக்கு அதிரடியான அடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட கேப்டன் இவர்தான். மேலும் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 597 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டி20 தொடர்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரரும் இவர் தான். எனவே ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார் ஜாகிர் கான்.