நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் செமி பைனல் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற நியூசிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கட்டுகளை இரண்டாவது ஓவரில் இழந்து நெருக்கடியில் சிக்கியது. இதிலிருந்து அவர்களால் கடைசி வரை மீள முடியவில்லை. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 30 பந்துகளில் 55 ரன்கள், டிவால்ட் பிரிவிஸ் 27 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஹென்றி மற்றும் ரவீந்திரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து கலக்கலாக விளையாடிய நியூசிலாந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 9.1 ஓவர்களில் 117 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து ஓபனர்கள் டிம் செய்பர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள், பின் ஆலன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் பட்டாசாய் வெடித்து 33 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி வெறும் 13 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் பின் ஆலன் டி20 உலக கோப்பையில் குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

