2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, அது குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து ஐபிஎல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் மும்பை அணி, குஜராத் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்தில் வாங்கியது. அதோடு மட்டுமில்லாமல் தற்போது ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து விடுவித்து புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு மும்பை அணி போதிய விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனதில் ரசிகர்கள் இல்லை. இதன் விளைவாக மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் அன்பாலோ செய்து தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததைத் தொடர்ந்து மும்பை அணியின் மற்றொரு வீரரான சூரிய குமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்குவது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை. எனவே மும்பை அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இடையே சிறிது கருத்து வேறுபாடு இருப்பது போல் தோன்றுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே இதற்கு யாராவது தகுந்த விளக்கம் கொடுத்தால் தான் இந்த சர்ச்சை முற்றுப்புள்ளி அடையும்.
இது ஒருபுறம் இருக்க ஐபிஎல்லில் மற்றொரு அணியான ஆர்சிபியின் செயல்பாடு என்பது வேறு. விராட் கோலி அணிக்காக ஒரு கோப்பையைக் கூட வென்று கொடுக்காத போதிலும் ஆர்சிபி அணி தொடர்ந்து அவரை கேப்டனாகவே நீட்டித்தது. சமீபத்தில் கோலியே முன்வந்து வேலைப்பளு காரணமாக தான் கேப்டன்ஷியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இருந்தாலும் ஆர்சிபி அணி நிர்வாகம் இதனை முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் வழிகாட்டுதலிலேயே டூபிளெஸ்ஸியை ஏலத்தில் வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது. எனினும் முக்கியமான தருணங்களில் அணிக்கு தேவையான ஆலோசனைகளை விராட் கோலி அவ்வப்போது வழங்கிக் கொண்டும் இருக்கிறார்.
மும்பை ரோகித் பிரச்சனை தற்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் ஆர்சிபி அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் “லாயல்டி இஸ் ராயல்டி” என்ற பெயரில் “விசுவாசமான ரசிகர்களுக்கு வாழ்த்து. உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டு ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மும்பை அணியை ட்ரோல் செய்யும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் டிரென்ட் செய்து வருகின்றனர். இதற்கு ரோஹித் சர்மாவே இறங்கி விளக்கம் கொடுத்தால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
Dropping Soon: “LOYALTY is ROYALTY” – 2024 #RCBXPuma Athleisure Collection
— Royal Challengers Bangalore (@RCBTweets) December 16, 2023
An ode to the best and the most loyal fans! We’re grateful for your unwavering support. #PlayBold @pumacricket pic.twitter.com/4ZRWwaFUHr