பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் இந்திய அணி செமி பைனலுக்கு தகுதி பெறாது என்று தொடர்ந்து சொல்லி வந்தார். மேலும் இந்திய அணி செமி பைனலுக்கு தகுதி பெற்றதும் அதிர்ஷ்டத்தால் வென்றது என்றும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்ரன் ஹெட்மையர் அவுட் ஆனது சர்ச்சைக்குரியது என்றும் பேச ஆரம்பித்தார். தற்போது வரை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் தகுதியுடன் இல்லை என தொடர்ந்து பேசி வருகிறார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசும் பொழுது “அமீருக்கு இந்தியா செமி பைனல் வரும் என்று தெரியாது என நினைக்கிறீர்களா? நடப்பு சாம்பியன் ஆன இந்தியா நிச்சயம் செமி பைனலில் இருக்கும் என்று அவருக்கு தெரியும். ஆனால் இந்திய அணியை பற்றி இப்படி பேசினால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என இப்படி பேசுகிறார்கள். நாம் அவர்களை பொருட்படுத்தி மீண்டும் பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நாம் அவர்கள் அளவுக்கு இறங்காமல் அவர்களை புறக்கணித்து விட வேண்டும்”
“அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அவர்களிடம் தரமான வீரர்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் இந்திய அணி இருக்கும் நிலைமைக்கு வரவே முடியாது. எனவே நாம் அவர்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லக்கூடாது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இதே பவுலர் தான் அமெரிக்க அணிக்கு எதிரான தோல்விக்கு முக்கிய காரணம். அந்த போட்டியில் ஒரு ஓவரில் பயத்தில் பல வைடுகளை வீசி அணியை தோற்கடித்த இவருக்கு நாம் பதில் சொல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

