பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அபிஷேக் ஷர்மா தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். அதே சமயத்தில் அவர் சிறப்பான முறையில் மாற வேண்டும் என்று தான் கூறிய கருத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என்றும், ஒரு பவுலர் பார்வையில் இருந்து தான் தான் அபிஷேக் ஷர்மா குறித்து கருத்துக்கள் தெரிவித்தேன் என்றும் விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.
இதற்கு முன்பாக அபிஷேக் சர்மா பற்றி முகமது அமீர் பேசும் பொழுது அவர் பந்தை வெறுமனே அடிக்கப் பார்ப்பவர் என்கின்ற வகையில் ஸ்லாக்கர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். தற்போது அந்த வார்த்தையை தான் தவறான நோக்கத்தில் பயன்படுத்தவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து முகமது அமீர் பேசும்பொழுது ” நான் இப்போதும் சொல்கிறேன் அபிஷேக் ஷர்மா நல்ல திறமையான வீரர். அவர் அந்த திறமையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவருடைய வளர்ச்சி இருக்கிறது. நான் அவரை தவறான முறையில் சொல்லவில்லை. ஆனால் மக்கள் தவறான முறையில் புரிந்து கொண்டார்கள். ஒரு மூத்த வீரராக சொல்கிறேன் அவர் பந்துக்கு தகுந்தபடி விளையாட ஆரம்பிக்க வேண்டும். நேற்று கூட ரபடாவின் மோசமான பந்துகளைத்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனால் அவர் சிறப்பாக பந்து வீச ஆரம்பித்ததும் அபிஷேக் ஷர்மாவால் என்ன செய்வது? என்று தெரியாமல் போய்விட்டது. எனவே அவர் தன் அணுகுமுறையை மாற்ற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

