இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக விளையாடி வரும் 21 வயதான அதிவேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்தான் இப்போது ஐபிஎல் களத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படும் ஒரே வீரர். இவர் குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஒரு சுவாரசியமான கருத்தை கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை வருடா வருடம் திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் மும்பை அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஐபிஎல் மூலம் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்தவர்கள்தான். இந்திய அணியில் இடம் பிடித்த நட்சத்திர ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் ஐபிஎல் இல் டெல்லி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு ஏன் கடந்த ஆண்டு கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐந்து பந்துகளில் ஐந்து சிக்சர்கள் விலாசி உலகப் புகழ்பெற்ற ரிங்கு சிங் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். அந்த வரிசையில் இந்திய அணிக்காக களம் இறங்க தற்போது காத்திருப்பவர் 21 வயதே ஆன மயங்க் யாதவ். பஞ்சாப் அணிக்காக இவர் களமிறங்கும் வரை இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.
பஞ்சாப் அணிக்கு எதிராக முதன் முதலில் அறிமுகமான மயங்க் யாதவ் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டாக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசினாலும் இவரது பந்து வீச்சில் அவ்வளவு தெளிவும், துல்லியமும் இருக்கிறது. அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர் நான்கு ஓவர்களில் 27ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனால் லக்னோ அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய மயங்க் யாதவ் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மேக்ஸ் வெல்லை முதலில் தூக்கினார். அவருக்குப் பிறகு களம் இறங்கிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை போல்ட் முறையில் வெளியேற்றினார். சாதாரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சை எளிதாக கையாளுவார்கள். ஆனால் அவர்களே சிரமப்படும் அளவிற்கு அற்புதமாக பந்து வீசி இருக்கிறார் இந்த இளம் வீரர்.
எனவே இவரை டி20 உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பலரும் கருத்து கூறிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியதாவது
“நான் அஜித் அகர்க்கர் ( தலைமை தேர்வாளர் )என்றால் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற ஐசிசி டி20 உலக கோப்பைக்கு பும்ரா மற்றும் சமிக்கு பிறகு இவரது பெயரை நிச்சயமாக எழுதுவேன். இந்த வீரர் பெரிய பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவுக்கு பெரிய தொடர்களில் விளையாட தகுதியான வீரர். மேக்ஸ்வெல் மற்றும் கிரீனுக்கு அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்.
இதையும் படிங்க:சிஎஸ்கேவில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
இந்தியாவுக்காக உயர் மட்டத்தில் விளையாடுவதற்கு அவரிடம் ஒரு தனி திறமை உள்ளது. எனவே இவரை இந்திய உலகக்கோப்பை அணியில் நிச்சயமாக தேர்வு செய்வேன்” என்று கூறி இருக்கிறார். தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள இந்த இளம் வீரர் விரைவில் இந்திய உலக கோப்பையில் இடம் பிடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முகமது சமியும் காயத்தால் அவதிப்படும் நிலையில் அவருக்கு இவர் சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

