இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்பொழுது இந்திய அணியில் விளையாடுவதும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு சரியான புகழும் அங்கீகாரமும் கொடுக்கப்படவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார். வருண் சக்கரவர்த்தி பும்ரா போன்ற தனித்துவமான வீரர் என்றும், அவர் போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது ஆனால் சரியான புகழ் அவருக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “நேற்று வரும் சக்கரவர்த்தி 14 ரண்களுக்கு நெதர்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எல்லோரையும் காலி செய்தார். சொல்லப்போனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் சர்வதேச கிரிக்கெட்டில் பவுலர்களை இதற்காக அரிதாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். அதே சமயத்தில் சிவம் துபே விளையாடிய ஆட்டமும் சிறப்பான ஒன்றுதான். இருந்த போதும் இன்னும் வருண் சக்கரவர்த்திக்கு அவரது திறமைக்கான அங்கீகாரமும் புகழும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை”
“இதுவே வருண் சக்கரவர்த்தி மும்பை வீரராக இருந்திருந்தால் அவரை வெறித்தனமாக எல்லோரும் கொண்டாடி இருப்பார்கள். காரணம் மும்பையில் இருந்து ஏதாவது ஒரு வீரர் வந்தால் அவரைப் பற்றி மிகவும் மிகையாக பேசும் பழக்கம் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறது. ஆனால் வரும் சக்கரவர்த்தி அமைதியாக வந்து தன்னுடைய வேலையை செய்துவிட்டு போய்விடுகிறார். ஒரு ஸ்பின்னர் ஆக இருந்தும் பெரிய ரன் அப் உடன் வந்து சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் பும்ரா போன்று தனித்துவமானவர். அவரை இன்னும் மக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

