இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்காவது வரிசையில் களம் இறங்கிய ருத்ராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருக்கிறார்.
சத்தீஸ்கரில் உள்ள ராய்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கி இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் மிக வேகமாக வெளியேற அதற்குப் பிறகு விராட் கோலி உடன் ருத்ராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டது.
இதில் ருதுராஜ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளை எதிர் கொண்டு 105 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார் இதில் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் அடங்கும். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சதம் அடித்திருக்கும் நிலையில் அவருக்கான கதவுகள் தற்போது மெல்ல திறக்க ஆரம்பித்திருக்கிறது. நான்காம் வரிசையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்திருந்த நிலையில் அதற்கு பிறகு தற்போது ருத்ராஜ் நான்காம் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

