இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. முன்னதாக முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி 149 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமத் இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் போது பயன்படுத்தப்படும் பந்துகள் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
எனினும் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஏழாவது விக்கெட் ஜோடியாக 199 ரன்கள் சேர்த்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதொடு வலுவான நிலைக்கும் அழைத்துச் சென்றனர். முதலாவது இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மக்மத் 5 விக்கெட்டுகளும் தஸ்கின் அஹமத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளின் போது பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்துகள் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர் பங்களாதேஷ் வீரர்கள் கூகபுரா பந்துகளை தங்கள் சிறு வயது முதல் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அந்த பந்துகளின் சீம் தட்டையாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்துகள், கூகபுரா பந்துகளில் இருந்து மாறுபட்டவை. எனவே எஸ்ஜீ பந்துகளை பயன்படுத்துவது எங்களுக்கு கடினமாக இருந்தது. இந்திய வீரர்கள் இளம் வயது முதலே எஸ்ஜி பந்துகளில் விளையாடி பழக்கப்பட்டதால் அதனை மிகவும் சிறப்பாக பயன்படுத்தினர் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். முதல் 10 ஓவர்களுக்குள் அதிகமான விக்கெட் இழந்தது எங்கள் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது என தெரிவித்தார். பேட்டிங் சரிவில் தான் நாங்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தோம் எனக் கூறினார்.
எஸ்ஜி பந்துகள் மற்றும் இந்திய ஆடுகளங்களின் தன்மை முதல் 10-12 ஓவர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கிறது. எந்த ஒரு பலம் வாய்ந்த அணிக்கு எதிராகவும் தங்களது சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சவாலானதாக உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த நாட்டில் நடைபெறும் போது அந்த சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது. எங்களது நாட்டில் நடைபெறும் போட்டிகளின் போது நாங்களும் எங்களது சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

