இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமணில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் வைத்து நாளை நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றி வாய்ப்பை நூலிலையில் தவறவிட்ட இந்தியா இரண்டாவது போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற முனைப்பு காட்டும். அதே வேளை இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியின் முடிவால் உற்சாகமடைந்திருக்கிறது. எனவே அவர்களும் இந்திய அணிக்கு வலுவான போட்டியை கொடுப்பார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முதல் போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் பந்து வீச்சு பலமானதாக இருந்தாலும் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அக்ஷர் பட்டேல் மற்றும் சிவம் துபே தவிர மற்ற பேட்ஸ்மேன் ரன் குவிக்க தவறிவிட்டனர். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கினாலும் முறையே 24 மற்றும் 23 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இவர்கள் இருவரது ஆட்டம் இழப்பு இந்திய அணிக்கு நேற்றைய போட்டியில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
கே.எல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மேட்ச்சை பினிஷ் செய்ய தவறி விட்டனர். இந்தத் தவறுகளை எல்லாம் சரி செய்து முழு பலத்துடன் இந்திய அணி நாளை களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். எனினும் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேலை விட வாஷிங்டன் சுந்தர் அதிக ரன்கள் கொடுத்தார்.
இதனால் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரியான் பராக் களமிறக்கப்படலாம் என்ற பேச்சும் கிரிக்கெட் நிபுணர்களிடையே நிலவி வருகிறது. டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் ரியான் பராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நாளை நடைபெற இருக்கும் முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக களம் இறங்க இருக்கும் இந்திய அணியில் விளையாடும் உத்தேசமான 11 வீரர்களை பற்றி பார்க்கலாம்.
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
கே.எல் ராகுல் ( விக்கெட் கீப்பர்)
சிவம் துபே
ரியான் பராக்/ வாஷிங்டன் சுந்தர்
அக்சர் பட்டேல்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
அர்ஷ்தீப் சிங்

