இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 471 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி, 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
பென் டெக்கெட் சதம்
இதனால் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5வது நாள் ஆட்டத்தை கிராலி – பென் டக்கெட் இணை தொடங்கியது. பும்ரா, சிராஜ் அட்டாக்கை தொடங்கிய போதும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை தொடங்கினர்.
இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த போதும், இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தி வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில், பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் கிராலி 65 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த போப் 8 ரன்களில் போல்டாகினார்.
இங்கிலாந்து வெற்றி
மறுபக்கம் பென் டக்கெட் அதிரடியாக ஆடி சதத்தை எட்டினார். ஜோர் ரூட் நிதானமாக விளையாட, இந்திய அணியின் கைகளில் இருந்து வெற்றி நழுவி சென்றது. அப்போது அட்டாக்கில் வந்த ஷர்துல் தாக்கூர் டக்கெட்டை 149 ரன்களிலும், ஹாரி ப்ரூக்கை டக் அவுட்டிலும் அடுத்தடுத்து பந்துகளில் வெளியேற்றினார். ஆனால் ஜோ ரூட் நங்கூரமிட்டு நிற்க, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் விரைவாக ரன்களை குவித்தனர்.
இறுதியாக ஜோ ரூட் அரைசதம் கடக்க, ஜேமி ஸ்மித் 55 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 373 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து கோட்டைவிட்ட 4 கேட்ச்களே காரணமாக பார்க்கப்படுகிறது.

