இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றில் மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது. டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது.
ஏற்கனவே இரண்டு விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் மேற்கொண்டு இந்திய அணி விளையாடியது. குல்தீப் யாதவ் ஐந்து ரன் எடுத்து வெளியேற, அதற்குப் பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரியத் தொடங்கியது. இதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மட்டும் அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அனைவரும் குறைந்த ரன்னில் வெளியேற இந்திய அணி 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 25 வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கிறது. மேலும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டியாகவும் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணி அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தான் மறக்க முடியாத உண்மையாக உள்ளது.

