இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 413 ரன்களை குவித்தது. இந்திய ஏ அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினர்.
சதம் அடித்த யுவராஜ் சிங் சிஷ்யன்
அதேபோல் பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அரைசதம் விளாசி இருக்கின்றனர். இதன்பின் 414 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, 33.1 ஓவர்களில் 242 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தொடக்க வீரர் மெக்கன்சி ஹார்வி 68 ரன்களையும், கேப்டன் வில் சதர்லேண்ட் 50 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய ஏ அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர். இந்தப் போட்டியில் பிரியன்ஷ் ஆர்யாவின் ஆட்டம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. ஏனென்றால் முதல் ஓவர் முதலே பிரியன்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். இதனால் 84 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 101 ரன்களை குவித்துள்ளார்.
ஒரே வாய்ப்பில் அசத்திய பிரியன்ஷ் ஆர்யா
இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்கிற்கு கீழ் பிரியன்ஷ் ஆர்யா பயிற்சியை தொடங்கி இருக்கிறார். பயிற்சியை தொடங்கிய ஒரு மாதத்திலேயே பிரியன்ஷ் ஆர்யா மாஸ் சம்பவம் செய்துள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் பிரியன்ஷ் ஆர்யாவின் ஆட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பை தொடரில் கலக்கிய அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர் அடுத்த 2 ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய ஏ அணியுடன் நாளை இணைய உள்ளனர். இதனால் பிரியன்ஷ் ஆர்யா வெளியில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஆனாலும் கிடைத்த ஒரே வாய்ப்பில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

