தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு மார்க்ரம் – ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரிக்கல்டன் 14 ரன்களிலும், மார்க்ரம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சாதித்த பிரெவிஸ்
இதன்பின் ப்ரிடோரியஸ் – பிரெவிஸ் கூட்டணி இணைந்தது. ப்ரிடோரியஸ் 10 ரன்களில் வெளியேற, ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் டிவால்ட் பிரெவிஸ் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். அதிலும் மேக்ஸ்வெல் வீசிய ஒரே ஓவரில் 6, 6, 4, 6 என்று மொத்தமாக 24 ரன்களை விளாசினார்.
இதன் மூலமாக 25 பந்துகளில் அரைசதம் விளாசிய பிரெவிஸ், அடுத்ததாக ஹேசல்வுட் வீசிய ஒரே ஓவரில் 4, 2, 4, 6 என்று 18 ரன்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பிரெவிஸ் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரெவிஸ் எழுச்சி
கடைசி வரை களத்தில் இருந்த பிரெவிஸ் 56 பந்துகளில் 8 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 125 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 17.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
நாளுக்கு நாள் பிரெவிஸ் எழுச்சி பெற்று வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பிரெவிஸ் இன்னும் பல்வேறு சம்பவங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

