வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்களை விளாசி இருக்கிறது.
கேஎல் ராகுல் பேட்டி
ஜடேஜா 109 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் கேஎல் ராகுல் 100 ரன்களும், துருவ் ஜுரெல் 125 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக கேஎல் ராகுல் 9 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் சதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஏனென்றால் கடைசியாக 2016ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் கேஎல் ராகுல் இந்திய மண்ணில் சதம் விளாசி இருந்தார். தற்போது மீண்டும் சதம் அடித்துள்ளார். இந்த சதம் விளாசிய பின் கேஎல் ராகுல் விசில் அடித்து வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கேஎல் ராகுலின் இந்த கொண்டாட்டத்திற்கு பின் என்ன காரணம் என்று புரியாமல் ரசிகர்கள் விவாதித்தனர்.
கொண்டாட்டம் ஏன்?
இதுதொடர்பாக கேஎல் ராகுல் பேசும் போது, அந்தக் கொண்டாட்டம் எனது மகளுக்காக தான். கடந்த வாரம் தான் ஒரு போட்டியில் ஆடினேன். அப்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் 5 முதல் 6 வாரங்களாக தொடர் ஓய்வில் இருந்தேன். மீண்டும் ஃபார்மில் இருக்கிறேனா என்பது சந்தேகமாக இருந்தது. எளிதாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிவிட முடியாது.
அது மனதளவிலும் உடல் அளவிலும் நம்மை சோதிக்கும். கடந்த வாரம் ஆடிய ஆட்டம் கொஞ்சம் கடினமாக இருந்தது. உடல் அளவில் அதிகமாக தளர்ந்துவிட்டேன். ஆனால் அன்றைய ஆட்டத்தில் விளையாடியதால் தான், இன்று எனக்கு உதவியாக இருந்தது. சொந்த மண்ணில் 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளேன். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தற்போது பேட்டிங்கில் டெம்போவை சரி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

