சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட இடைவெளிக்கு பின் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி இருந்தார். ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட், பின் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஏ அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன்பின் புச்சி பாபு டிராபியில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், சதம் விளாசி கம்பேக் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதன் அரையிறுதி போட்டியில் ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மேற்கு மண்டல அணியை எதிர்த்து ரஜத் பட்டிதர் தலைமையிலான மத்திய மண்டல அணி களமிறங்கியது.
போராடிய ருதுராஜ்
டாஸ் வென்ற மேற்கு மண்டல அணியின் கேப்டன் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மேற்கு மண்டல அணி தடுமாறியது. அப்போது ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வந்தார்.
பவுண்டரிகளாக விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், உணவு இடைவேளைக்குள் அரைசதத்தை கடந்தார். எதிர்முனையில் ஆடிய ஆர்யா தேசாய் 39 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களிலும், ஷாம்ஸ் முலானி 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் பொறுப்பை உணர்ந்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை கடந்து அசத்தினார்.
மிஸ்ஸான இரட்டை சதம்
தொடர்ந்து ஒரு பக்கம் தனுஷ் கோட்டியானை களத்தில் வைத்து கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ரன்களை விளாசி தள்ளினார். சதத்தை கடந்த பின் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் உச்சத்திற்கு சென்றது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது சரன்ஷ் ஜெய்ன் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஸ்டம்பிங்காஇ வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய அவர் 206 பந்துகளில் ஒரு சிக்ஸ், 25 பவுண்டரி உட்பட 184 ரன்களை விளாசி தள்ளினார். டாப் 6 வீரர்களில் ஒருவர் கூட 40 ரன்களை எட்டாத நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தனி வீரராக மேற்கு மண்டல அணியை தனது தலையில் சுமந்திருக்கிறார். இதனால் ருதுராஜ் கெய்க்வாடை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

