இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் சில அதிரடி முடிவுகளை எடுத்தது. இதன்படி 45 நாட்களுக்கு மேல் நீளும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மட்டுமே வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 14 நாட்கள் தங்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி நிர்வாகம் டி20 உலகக் கோப்பை நடந்து வரும் நிலையில் இது குறித்து மீண்டும் தங்களது சந்தேகத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முன்வைத்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்த முடியாது என்று கூறி விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது இந்திய வீரர்கள் தாங்கள் தங்கும் ஹோட்டலில் தங்களது குடும்பத்தினரை தங்க வைக்க முடியாது. அதற்கு பதிலாக அவர்களுடைய சொந்த செலவில் அருகில் உள்ள வேறு ஹோட்டல்களில் தங்க வைத்துக் கொள்ள முடியும். இதே போல வீரர்களின் தனிப்பட்ட மேனேஜர்கள் சமையல்காரர்கள் யாரையும் ஒரே ஹோட்டலில் தங்க வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதற்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனியார் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் வீரர்களுக்கான பயண அலைச்சல் குறையும் என்று கூறப்படுகிறது.

