நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி ஜிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்து உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. சீனியர் வீரர்களுக்கு பிறகு இளம் வீரர்கள் பெரிய அளவில் ஆஸ்திரேலியா அணியில் அடையாளம் காணப்படாததால் சிறப்பான வீரர்கள் இல்லாமல் அணி தவித்து வருகிறது.
எப்போதுமே உலகக்கோப்பை தொடர் என்றால் குறைந்தபட்சம் அரை இறுதி என்ற நிலை இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு இப்போது லீக் சுற்றில் சிறிய அணிகளிடமே தோல்வி அடைந்து வெளியேறும் நிலைக்கு வந்திருப்பது பல தரப்பினைடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா டி20 கேப்டனான மிச்சல் மார்ஸ் இது குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இப்போதும் நான் சொல்கிறேன், டி20 உலக கோப்பை தொடரில் நாங்கள் தொடக்கத்திலேயே வெளியேறி இருந்தாலும் கோப்பையை வெல்லக்கூடிய அளவிற்கு நம் அணியிருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எப்படிப்பட்ட அணி நம்மிடம் இருந்தாலும் அன்றைய நாள் அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை என்றால் இது போன்ற தவறுகள் நிகழத்தான் செய்யும். எங்களுக்கு கடந்த இரு வாரங்களாக நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. ஆனால் நாங்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். இதுதான் தோல்விக்கு உண்மையான காரணம்” என்று பேசி இருக்கிறார்.

