தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் பத்தாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. ஏற்கனவே இந்திய அணியுடனான தனது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது.
இந்தப் போட்டியை உத்திர பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா மற்றும் குயின்டன் டிகாக் இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பவுமா 35 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஆட வந்த ரசி வாண்டர் டேசன் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டிகாக் உடன் ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. இந்தப் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணியின் குயின்டன் டிகாக் சதம் எடுத்தார். இது உலகக்கோப்பை போட்டிகளில் அவர் எடுக்கும் இரண்டாவது சதமாகும். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுக்கும் 19ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 107 பந்துகளில் 108 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் சுழலில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதில் 8 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் இவரைத் தொடர்ந்து கிளாசன் 29 ரன்கள் டேவிட் மில்லர் 17 ரன்கள் மற்றும் யான்சன் 26 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான மார்ஸ் 7 ரன்களிலும் டேவிட் வார்னர் 17 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் தனது ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினாலும் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வேகத்தில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜோஸ் இங்கிள்ஸ் 5 ரன்களிலும் அதிரடி ஆட்டக்காரர்களான மேக்ஸ்வெல் 3 ரன்களிலும் ஸ்டோய்னிஸ் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களைத் தொடர்ந்து பின் வரிசையில் களமிறங்கிய மிச்சர் ஸ்டார்க் 27 ரன்களும் கேப்டன் கம்மின்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அந்த அணியின் லபுஷென் மட்டும் சிறப்பாக விளையாடி 74 பந்துகளில் மூன்று பௌண்டடிகள் உடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியின் ஆட்டம் ஜாம்பா 7 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் ரபாடா 3 விக்கெட்டுகளும் யான்சன், கேசவ் மகராஜ் மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் . இங்கிடி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உலகக் கோப்பையில் தனது இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே அந்த அணி இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி தென்னாப்பிரிக்க அணி நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி தற்போது ஒரு இடங்கள் கீழ் இறங்கி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியுடன் ஆன இந்த படுதோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி ஏழாவது இடத்தில் இருந்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கே பின்தங்கி இருக்கிறது.