இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. சமீபத்தில் டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து முக்கிய இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றாலும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் தோற்றது மிகப்பெரிய வடுவாக அமைந்தது.
டி20 கிரிக்கெட்டை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு நாள் உலகக் கோப்பையில் தோற்றது தனக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது என்று முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் அந்த உலகக் கோப்பை தோற்பதற்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த தவறுதான் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி அந்த உலகக் கோப்பையை தோற்றதற்கு களத்திற்கு வெளியே ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் செய்த வினை தான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சுழற் பந்துவீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் அகமதாபாத் ஆடுகளத்தை வேகம் குறைத்து மாற்றியமைத்தது இந்திய அணிக்கு பெரிய எமனாக அமைந்தது. சூரியகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கும் போது வேகம் குறைந்த ஆடுகளத்தை மாற்றி அமைத்தது இந்திய அணி தனக்குத்தானே செய்த வினை” என்று பேசி இருக்கிறார்.

