ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி தற்போது மும்பை வாங்கடே மைதானத்தில் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பை அணி வீரர் சர்துல் தாக்கூர் தனது நண்பரும், சக வீரரின் ஓய்வு குறித்து சில உணர்ச்சிவசமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க விக்கட்டுக்கு 81 ரன்கள் குவித்து நிதானமாக விளையாடினாலும், பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அதனை சரியாக செயல்படுத்தவில்லை.
பின்னர் இறுதி வரிசையில் இறங்கிய சர்துல் தாகூர் இந்த முறையும் சிறப்பாக விளையாடி 69 பந்துகளில் 8 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 75 ரன்கள் குவித்தார். இவரின் அதிரடி ஆட்டத்தினால் மும்பை அணி 224 ரன்கள் குவிக்க நேர்ந்தது. இவரே அரை இறுதி போட்டியிலும் சதம் அடித்து தமிழக அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்.
இதன் காரணமாகவே தமிழக அரை இறுதி போட்டியில் இருந்து வெளியேற நேர்ந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் விளையாடி வரும் மும்பை அணியை சேர்ந்த தவான் குல்கர்னி ரஞ்சி டிராபியோடு ஓய்வு பெறுகிறார். இந்திய அணியில் 2014ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 19 விக்கெட்டுகளும், 2016 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இரு போட்டிகளில் விளையாடி மூன்று விக்கட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.
இவர் ஐபிஎல்லில் மும்பை, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் முதல் தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி 86 போட்டிகளில் 261 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். எனவே இந்த இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறும் நிலையில் அவரது சக வீரரான சர்துல் தாகூர் தவான் குல்கர்னி குறித்து சில உணர்ச்சிமிகு கருத்துக்களை பகிர்ந்து உள்ளார் இது குறித்து அவர் கூறியதாவது
“அவர் அவரது கடைசி போட்டியில் விளையாடுவது எனக்கும் அவருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்திருக்கிறது. நான் அவரை எனது சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். நான் கஷ்டப்படும் தருணங்களில் எனக்கு உதவியாய் இருந்திருக்கிறார். எனக்கு அப்போது ஷூ வாங்க கூட பணம் இருக்காது. அந்த நிலையில் எனக்கு நிறைய உதவி புரிந்திருக்கிறார். அந்த உதவிகளை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 224 ரன்கள் எடுத்துள்ள நிலையில் பின்னர் பேட்டிங் செய்த விதர்பா அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் குவித்து இருக்கிறது. முஷிர் கான் 43 ரன்களுடனும், கேப்டன் ரகானே 57 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.