விஜய் ஹசாரே தொடரின் சி பிரிவில் மும்பை – கர்நாடகா அணிகள் இடையேயான அதிரடி ஆட்டத்தில் கர்நாடகா பெரிய இலக்கை துரத்தி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. மும்பை அணியின் துவக்க வீரர் ரகுவன்ஷி வெறும் 6 ரன்களில் வெளியேறினார். ஆயுஷ் – ஹர்திக் டமோரே இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். ஆயுஷ் 78, ஹர்திக் டமோரே 84 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்த சூரியகுமார் யாதவ் 20 ரன்களில் வந்த வேகத்தில் கிளம்பினார்.
அதனைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் – ஷிவம் டூபே ஜோடி அதிரடியைக் கையில் எடுக்க ஸ்கோர் மல மலவென ஏறியது. 65 பந்துகளில் இவர்களது பார்ட்னர்ஷிப் 148 ரன்களை குவித்துள்ளது. ஐயர் 207 ஸ்ட்ரைக் ரேட்டில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என மொத்தம் 110* ரன்கள் அடித்து நொறுக்க மறுபக்கம் டூபே 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் & 5 சிக்ஸர்கள் என 63* ரன்கள் விளாசினர். 50 ஓவர்களில் மும்பை அணி 382/4 என முடித்தது.
கர்நாடக பந்துவீச்சில் வித்யாதார் பாட்டில் என்னதான் முதல் முக்கிய விக்கெட்டை எடுத்து இருந்தாலும் 10 ஓவர்களில் 103 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். மற்றப்படி பிரவீன் டூபே 2, ஷ்ரேயாஸ் கோபால் 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இமாலய இலக்கான 383 ரன்களை சேஸ் செய்வது கடினம் என எண்ணப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கி மிகவும் சுலபமாக கர்நாடகா வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.
துவக்க ஆட்டக்காரர்கள் நிக்கின் ஜாஸ் 21 ஆட்டமிழக்க மறுபக்கம் கேப்டன் மயாங் அகர்வால் ஓரளவு நிலைத்து நின்று 47 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அனீஷ் – கிருஷ்ணன் ஸ்ரீஜித் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு மெல்ல மெல்ல அழைத்துச் சென்றனர். அனீஷ் 82 ரன்கள் அடித்து வெளியேற அவரது இடத்தில் இருந்து ஶ்ரீஜித்துடன் ஜோடி சேர்ந்து ஆடிய பிரவீன் டூபே 65* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
விக்கெட் கீப்பர் ஶ்ரீஜித் 101 பந்துகளில் 150* ரன்களில் வெற்றியை 4 ஓவர்களுக்கு முன்னரே உறுதி செய்தார். இவரை இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே தொடரில் சேஸ் செய்யப்பட்ட 2வது அதிகபட்ச இலக்கு இதுவாகப் பதிவாகியுள்ளது.

