இந்திய அணிக்கு கடந்த 24 மணி நேரத்தில் மகிழ்ச்சியான மற்றும் சோகமான செய்திகள் கலந்து வெளி வந்திருக்கிறது. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா முழுவதும் குணமடைந்து இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்து காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் மீண்டு வந்து இந்திய அணியில் இணைந்து விட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்த இரண்டு செய்திகளும் இந்திய அணிக்கு மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனைக்கு சென்று வந்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவர் இந்திய அணியின் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. எனவே அவர் இன்று 100% போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு இருக்கிறது. முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக அவர் கோல்டன் டக் ஆகியிருந்தார். இன்று டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக அவர் தனது ரன் கணக்கை துவங்குவார் என எதிர்பார்த்து இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
அதே சமயத்தில் நேற்றைய பயிற்சியில் பும்ரா பந்துவீச்சில் துவக்க ஆட்டக்காரர் இசான் கிசான் காலில் பலத்த காயமடைந்திருக்கிறார். எனவே அவரும் இன்றைய போட்டியில் விளையாடுவது கடினம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் விளையாடாவிட்டால் அணிக்கு திரும்பி வந்திருக்கும் வாஷிங்டன் சுந்தர் துவக்க வீரராக களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இந்த செய்திகள் தற்போது இந்திய அணிக்கு சோகமானதாக மாறியிருக்கிறது.

